ஜனாதிபதி தேர்தல்: கலாமிற்கு இணையத்தில் பொதுமக்கள் ஆதரவு
அடுத்த ஜனாதிபதியை தேர்ந்து எடுப்பதற்கான வேலைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மத்தியில் ஆட்சி செய்யும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்போவது பிரணாப் முகர்ஜியையா? அல்லது ஹமீது அன்சாரியையா? என்ற கேள்விகள் எழுந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன.
அரசியல் ரீதியாக பிரணாப் முகர்ஜிக்கு அரசியல் தலைவர்கள் பலர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். ஆனால் மக்களின் ஆதரவாளராக ஏவுகணை விஞ்ஞானி அப்துல் கலாம்தான் உள்ளார்.
அப்துல் கலாம்தான் அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டும் என சமூக வலைத்தளங்கள் மூலம் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அப்துல் கலாமுக்கு ஆதரவு திரட்டும் வகையில் ‘அப்துல்கலாமே மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்’. ‘ஜனாதிபதியாக அப்துல் கலாம்’ என்ற பெயர்களில் சிலர் பேஸ்புக் தொடங்கியுள்ளனர். இந்திய ஜனாதிபதி தேர்தலில் பொதுமக்கள் குரல் கொடுப்பது இதுவே முதல்முறை ஆகும்.
பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் அப்துல் கலாமுக்கு ஆதரவு தெரிவித்து வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கள் வருமாறு:-
ஜனாதிபதி பதவிக்கான குறைந்தபட்ச தகுதியை நிறைவு செய்யக்கூடிய ஒரே நபர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மட்டுமே என்று சுமித் நக்பால் என்பவர் குறிப்பிட்டுள்ளார். அதிகமாக படித்தவர், பண்பாளர், பணிவானவர் மற்றும் மக்களின் ஜனாதிபதி என்று பலர் எழுதியுள்ளனர்.
அப்துல்கலாம் ஒரு மாபெரும் தலைவர். அவர் இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்பதால் உலக அரங்கில் இந்தியாவை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வார் என நாகார்ஜுன் ஷெட்டி என்பவர் சொல்லி இருக்கிறார்.
வெளிநாடு சுற்றுப் பயணத்தில் கூட்டத்தையே தன்னுடன் அழைத்து செல்ல கலாமுக்கு ஒரு குடும்பம் கிடையாது. நில மோசடி செய்யவில்லை. எனவே அவர் ஜனாதிபதி பதவி வகிக்க முடியாது என்று தற்கால நிகழ்வுகளை கிண்டல் செய்தும் கருத்து வெளியிட்டுள்ளார்.
இவர்கள் போன்று ஏராளமானோர் அப்துல்கலாம்தான் அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். ஆதரவு தெரிவித்து கருத்துக்களை பதிவு செய்யுமாறு பொது மக்களை கலாம் விசுவாசிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply