ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம்: வைகோ, தொண்டர்கள் கைது
மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சிக்கு வருகை தந்துள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கறுப்புக் கொடி காட்ட மத்திய பிரதேசம் சென்ற மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அம்மாநில எல்லையான சிந்த்வாராவின் பட்சிசோலி கிராமத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் கைது செய்யப்பட்டார்.
மகாராஷ்டிரா – மத்திய பிரதேச மாநில எல்லையான சிந்த்வாராவில் வைகோ மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மூன்று நாட்களுக்கு முன்பே தடுக்கப்பட்டனர்.
கடந்த 3 நாட்களாக தடுத்து வைக்கப்பட்ட இடத்திலே உண்டு உறங்கி தொடர் போராட்டங்களை வைகோ நடத்தி வந்தார். இந்த நிலையில் இன்று (22) காலை சிந்த்வாராவில் இருந்து சாஞ்சி நோக்கி தமது தொண்டர் படையுடன் வைகோ புறப்படத் தயாரானார். ஆனால் வைகோ மற்றும் அவரது தொண்டர்களை முன்னேறவிடாமல் தடுத்த மத்திய பிரதேச மாநில பொலிஸார் அனைவரையும் கைது செய்தனர்.
அப்போது வைகோ மற்றும் அவரது தொண்டர்கள் உரத்த குரலில், மன்னிக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம்! மத்திய அரசை மன்னிக்கமாட்டோம்! மத்திய பிரதேச பாஜக அரசையும் மன்னிக்க மாட்டோம் என்று முழக்கமிட்டனர்.
கைது நடவடிக்கையின்போது பொலிஸாருக்கும் மதிமுக தொண்டர்களுக்கும் இடையே கைகலப்பும் ஏற்பட்டது.
அப்போது பேசிய வைகோ, தமிழர்கள் விஷயத்தில் பாஜகவும் காங்கிரசும் மக்களின் மன ஓட்டைத்தைப் புரிந்து கொள்ளாமல் செயல்பட்டு வருகின்றன என்றார். கைது செய்யப்பட்டவர்கள் வான்களில் ஏற்றிச் செல்லப்பட்டனர்.
தமது அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக இன்று மாலையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போவதாக வைகோ அறிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply