பிரபாகரன் உயிரோடு இருப்பதாக வைகோ பொய் பிரச்சாரம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு இருப்பதாக வை.கோ போலிப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாகவும், முன்னாள் புலி உறுப்பினர் என்ற ரீதியில் தாம் பிரபாகரனின் சடலத்தை அடையாளம் காட்டியதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல்வாதிகள் தங்களது அரசியல் நோக்கங்களைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக தமிழர் பிரச்சினைகளைப் பயன்படுத்திக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரபாகரன் உயிரிழப்பு தொடர்பில் எவ்வித சந்தேகங்களும் கொள்ளத் தேவையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் ஆயுதக் கிளர்ச்சி மீளவும் தலைதூக்க வாய்ப்பு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கமும் பேச்சுவார்த்தை நடத்துவதே தமிழ் மக்களுக்கு தீர்வுத் திட்டத்தை வழங்கக் கூடிய ஒரே வழி என தயா மாஸ்டர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைவதற்கு எவ்வித சாத்தியமும் கிடையாது எனவும் வெளிநாட்டு புலம்பெயர் தமிழர்களின் மூலம் குறிப்பிடத்தக்களவு அரசியல் அழுத்தங்களை புலி ஆதரவாளர்களினால் பிரயோகிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

30 ஆண்டு கால யுத்தம் காரணமாக தமிழ் சமூகம் பாரிய பின்னடைவுகளை எதிர்நோக்கியதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தாம் அங்கம் வகிக்கவில்லை எனவும், அந்த அமைப்பில் கடமையாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

1987ம் ஆண்டு மற்றும் 2002ம் ஆண்டு ஆகிய இரண்டு சந்தர்ப்பங்களில் சமாதானத்தை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புக்களை பிரபாகரன் கைநழுவ விட்டதாகவும் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக வை.கோ போன்றவர்கள் போலிப் பிரச்சாரம் செய்து வருவதாகவும் தயா மாஸ்டர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தாமும், பிரதி அமைச்சர் கருணாவும் பிரபாகரனின் சடலத்தை அடையாளம் காட்டியதாகவும் தமிழக அரசியல்வாதிகள் தங்களது அரசியல் இருப்பிற்காக இலங்கை விவகாரம் பற்றி பேசுவார்களே தவிர மெய்யான கரிசனை எதுவும் கிடையாது எனவும் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply