டெசோ தீர்மானங்களுடன் ஸ்டாலின் 30ம் திகதி ஐநா செல்கிறார்
டெசோ மாநாட்டு தீர்மானங்களை கொடுப்பதற்காக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் இம்மாதம் 30ம் திகதி ஐக்கிய நாடுகள் சபைக்கு செல்கிறார். இவருடன் டி.ஆர்.பாலு எம்.பி.,யும் செல்கிறார். சென்னையில், ஆகஸ்ட், 12ம் திகதி, “டெசோ´ மாநாட்டை தி.மு.க., நடத்தியது. இதில் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு, சம உரிமை, அரசியல் அதிகாரம் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
“இத்தீர்மானங்கள் மீது, இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஐ.நா.சபைக்கு செல்வோம்´ என்று, டெசோ மாநாட்டில், தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவித்திருந்தார்.
இதற்காக ஐ.நா., நிர்வாகிகளிடம் திகதி கேட்டு, தி.மு.க., அணுகியது. இரண்டரை மாத இடைவெளிக்குப் பின், ஐ.நா., சபையின் அனுமதி கிடைத்துள்ளது.
டெசோ மாநாட்டு தீர்மானங்களை எடுத்துக்கொண்டு, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், பார்லிமென்ட் தி.மு.க., தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர், இம்மாதம், 30ம் திகதி, ஐ.நா., சபைக்கு செல்கின்றனர்.
நியூயார்க் நகரில் உள்ள, ஐ.நா.,சபையின் தலைமையகத்திலும், ஜெனிவாவில் உள்ள ஐ.நா.,சபையின் அகதிகள் ஆணையத்திலும், தீர்மானங்களை அளிக்கின்றனர்.
ஈழத் தமிழர்களின் மறுவாழ்வு உள்ளிட்ட பிரச்னைகளில், உடனடி நடவடிக்கை எடுக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என, ஐ.நா., சபையை கேட்டுக் கொள்கின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply