பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இருவர் யாழில் விடுதலை

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இருவர் யாழ். மேல் நீதிமன்றினால் இன்று திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பெரிய தம்பகாமம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் ரவிக்குமார் என்பவர் 20.04.2009 ஆம் திகதி முல்லைத்தீவு, பொக்கனை பகுதியிலும், தெல்லிப்பளை, வீமன்காமம் பகுதியை சேர்ந்த ரவிசங்கர் 17.05.2009 ஆம் திகதி ஓமந்தைப் பகுதியிலும் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு எதிராக யாழ். மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, இருவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் கடந்த ஓகஸ்ட் மாதம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேற்படி வழக்கினை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே. விஸ்வநாதன் இருவரையும் இன்று விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்ய்ப்பட்ட நபரொருவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் யாழ். மேல் நீதிமன்றினால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.

சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான செல்வரத்தினம் சசிகரன் என்பவர் கடந்த 13.05.2012 ஆம் திகதி நெளுக்குளம் நலன்புரி முகாமில் வைத்து புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி வழக்கு யூலை மாதம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சந்தேகநபரினால் யாழ். மேல் நீதிமன்றில் இன்று வழங்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிக்கப்பட்டது.

சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணி ரெமீடியஸ் ஆஜராகியிருந்தார். இந்த வழக்கினை எதிர்வரும் 20ஆம் திகதி வரை யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே.விஸ்வநாதன் ஒத்திவைத்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply