விசா மோசடி வழக்கு தேவயானியை கைது செய்ய அமெரிக்கா உத்தரவு

தேவயானி கோப்ரகடே மீது புதிதாக தொடரப்பட்ட விசா மோசடி வழக்கில், அவருக்கு எதிராக அமெரிக்க கோர்ட்டு கைது வாரண்டு பிறப்பித்துள்ளது. அமெரிக்காவில் இந்திய துணைத்தூதராக பணியாற்றி வந்த தேவயானி கோப்ரகடே (வயது 39), தனது பணிப்பெண்ணின் விசா விண்ணப்பத்தில் தவறான தகவல்கள் அளித்து மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், கடந்த டிசம்பர் 12-ந்தேதி கைது செய்யப்பட்டார்.அவரை அமெரிக்க போலீசார் கை விலங்கிட்டு, ஆடை அவிழ்த்து சோதனை செய்தது இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டது. எனினும் தேவயானி மீது நியூயார்க் கோர்ட்டில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதுடன், அவரை நாடு திரும்பும்படி அமெரிக்கா உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 10-ந்தேதி தேவயானி இந்தியா திரும்பினார். பின்னர், தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி அவர் நியூயார்க் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஷிரா சென்ட்லின், தேவயானி மீதான வழக்கை தள்ளுபடி செய்து கடந்த புதன்கிழமை அறிவித்தார்.

ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகத்தில் ஆலோசகராக தேவயானி பணி நியமனம் செய்யப்பட்டு, அதை அமெரிக்க வெளியுறவுத்துறை கடந்த ஜனவரி 8-ந்தேதி அங்கீகரித்து விட்டது. எனவே அவருக்கு தூதரக ரீதியிலான முழுமையான விலக்கு கிடைத்து விட்டதால், அவர் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என தீர்ப்பில் கூறப்பட்டது.

இது தேவயானி குடும்பத்தினர் மட்டுமின்றி மத்திய அரசுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே இந்த வழக்கில் புதிய திருப்பமாக, தேவயானிக்கு எதிராக அமெரிக்காவின் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு வக்கீல் பிரீத் பராரா நேற்று புதிதாக 21 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

அதில், தேவயானி தனது பணிப்பெண்ணுக்கு விசா பெற்றதில் தவறான தகவல்களை அளித்து மோசடியில் ஈடுபட்டதாகவும், சொந்த ஆதாயத்துக்காக சட்ட விரோதமாக செயல்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதை விசாரித்த நீதிமன்றம், தேவயானிக்கு எதிராக கைது வாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது. இதன் மூலம், அமெரிக்காவில் வசிக்கும் தனது கணவர் மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்காக, தேவயானி அங்கு சென்றால் கைதாகும் நிலை உருவாகி உள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மத்திய அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேவயானி மீதான வழக்கை அமெரிக்க நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்த நிலையில், அவர் மீது மீண்டும் புதிதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கும் நடவடிக்கை தேவையற்றது என மத்திய அரசு கூறியுள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை கவலையளிப்பதாக கூறியுள்ள இந்திய அதிகாரிகள், இது இந்திய-அமெரிக்க உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply