குடியரசு தினவிழா: ஒபாமா 25-ந் தேதி காலை டெல்லி வருகிறார்- சுற்றுப்பயண விவரம் அறிவிப்பு
குடியரசு தினவிழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா 25-ந்தேதி காலை 10 மணிக்கு டெல்லி வந்து சேருகிறார். குடியரசு தினவிழாவில் கலந்துகொள்வதற்காக 3 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தனது மனைவி மிச்செலுடன் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா வருகிறார். அவருடன் அதிகாரிகள் குழுவினரும் வருகிறார்கள். அவரது சுற்றுப்பயணம் பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது. அதன்படி, ஏர்போர்ஸ்௧ விமானம் மூலம் ஒபாமா 25-ந்தேதி காலை 10 மணிக்கு டெல்லி வந்து சேருகிறார். பின்னர் அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அதன்பிறகு ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், ஒபாமாவும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். முதலில் இரு தலைவர்களும் சிறிது நேரம் தனியாக சந்தித்து பேசுவார்கள். அதன்பிறகு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வார்கள். பேச்சுவார்த்தை முடிந்ததும் ஒபாமாவுக்கு பிரதமர் மோடி மதிய விருந்து அளிக்கிறார். இரவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, ஒபாமா சந்தித்து பேசுகிறார். அப்போது அவருக்கு ஜனாதிபதி இரவு விருந்து அளிக்கிறார்.
26-ந்தேதி காலையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அது முடிந்ததும் ஜனாதிபதி அளிக்கும் மதிய விருந்தில் பங்கேற்கிறார். பிற்பகலில் பிரதமர் மோடியும், ஒபாமாவும் தொழில் அதிபர்களை சந்தித்து பேசுகிறார்கள்.
27-ந்தேதி காலை பிரதமர் மோடியும், ஒபாமாவும் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்கள்.
அதன்பிறகு ஒபாமா தனது மனைவி மிச்செலுடன் டெல்லியில் இருந்து ஆக்ரா சென்று தாஜ்மகாலை பார்வையிடுகிறார். பின்னர் அங்கிருந்து டெல்லி திரும்பும் அவர், அன்றே தனது இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.
ஒபாமா இந்தியாவில் இருக்கும் போது, அவரது சுற்றுப்பயணம் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்பான ஏற்பாடுகளை மின்சாரம் மற்றும் நிலக்கரி துறை மந்திரி பியூஷ் கோயல் கவனித்துக்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply