நடுக்கடலில் ரூ.3500 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்

குஜராத் மாநிலத்தில் நடுக்கடலில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ரூ.3500 கோடி மதிப்பிலான 1500 கிலோ போதைப்பொருட்கள் கடலோர காவல் படையால் கைப்பற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப், குஜராத் மாநில எல்லைகள் வழியாக இந்திய பகுதிக்குள் போதைப்பொருள் கடத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இந்த போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியாவின் மேற்குப்பகுதி எல்லையில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடந்து வருகின்றன. மேலும், குஜராத் உள்ளிட்ட மேற்கு கடலோர பகுதிகளிலும் ரோந்து பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் குஜராத் கடற்பகுதி வழியாக சரக்கு கப்பல் ஒன்றில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக இந்திய கடலோர காவல்படையினருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கடலோர காவல்படையினர் தங்கள் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தினர்.

அப்போது, நேற்று சுமார் 12 மணியளவில் அந்த வழியாக வந்த சரக்கு கப்பல் ஒன்றை கடலோர காவல்படையினர் இடைமறித்து நிறுத்தினர். பின்னர் அந்த சரக்கு கப்பலில் கடலோர காவல் படையினர் சோதனை நடத்தினர். அப்போது அதில் சுமார் 1500 கிலோ அளவுக்கு ஹெராயின் எனப்படும் போதைப்பொருள் இருந்தது கண்டறியப்பட்டது.

சர்வதேச சந்தையில் ரூ.3,500 கோடி மதிப்புள்ள அந்த போதைப்பொருளை உடனே கைப்பற்றிய கடலோர காவல்படையினர், அதை கரைப்பகுதிக்கு கொண்டு வந்தனர். அந்த சரக்கு கப்பல் ஆழ்கடல் பகுதியிலேயே நிறுத்திவைக்கப்பட்டு உள்ள நிலையில், பிடிபட்ட போதைப்பொருள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் குஜராத் மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் மூவரை கைது செய்து உள்ளது

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply